Posts

Showing posts from March, 2014

ஒண்ணுமில்லை

எதையோ நினைத்து ஓரிடத்தை என்கண்கள் வெறிப்பதைக்கண்டு என்னிடம் என்னவென்று கேட்காதீர்கள், என் "ஒண்ணுமில்லை" எனும் பதில் உங்களைத்திருப்தி செய்யாதென்றால். உயிருள்ளவரை உடனிருப்பேன் என்றொரு நாள் சத்தியம் செய்த, பின்னொரு நாள், போய்வருகிறேன் என்று கூட சொல்லாமல் பிரிந்துசென்ற காதலியையோ வாழவக்கற்ற நிலையில் உதவி தேடிச்சென்றபோது போடா வேசிமகனே என வைத சொந்தக்காரரையோ கண்முன்னேயே உழைப்பைக்களவாடி அதற்கான சிறப்புக்கூலியை கவர்ந்துகொண்ட சக ஊழியனையோ வாழ்நாளின் இறுதிவரை உழைத்துக்கொட்டிய அப்பாவுக்கு புற்றுநோய் சிகிச்சைசெய்யமுடியா கையாலாகாதனத்தையோ சட்டென எல்லாம் மறந்து வெளிறிப்போய் சூன்யமாகி உண்மையிலேயே ஒண்ணுமில்லாததைக்கூட நினைத்துக்கொண்டிருக்கலாம் என் ஒண்ணுமில்லை எனும் பதில் உங்களைத்திருப்தி செய்யாதென்றால் என்னிடம் என்னவென்று கேட்காதீர்கள்